Sunday, July 10, 2011

ஒன்றை மூடி மறைக்க அதற்கு பதிலாக வேறு ஒன்றை மறைக்கநேரிடுமாம் !

0 comments
சமீபத்தில் பெருமதிப்புக்குரிய ஐயா நெடுமாறன் அவர்கள் ஒரு அறிவித்தலை தன் கையொப்பத்தோடு வெளியிட்டார். அதில் தான் தஞ்சாவூரில் கட்டும் ஈகிகள் முற்றம் என்னும் இடத்துக்கு காசுசேர்க்கும் ஒரு இணையம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். தனது முன் அனுமதியின்றி, தமக்கே தெரியாமல் காசுசேகரிக்கப்படுவதாகவும், அவ்வாறு ஒரு உரிமையை யாருக்கும் தான் கொடுக்கவில்லை என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார். (5.07.11 அன்று வெளியான அவ்வறிவித்தலை இங்கு அழுத்திப் பார்க்கலாம்) அது எந்த இணையம் என ஆராய்ந்தபோது அது தமிழ் வின் எனக் கண்டறியப்பட்டது. சுவிசில் உள்ள சில நபர்கள், தமிழ் வின் இணையத்தைப் பாவித்து பேப் பாலூடாக இந் நிதிச்சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் வேறு எந்த இணையத்திலும் நிதிசேகரிப்பது தொடர்பாக செய்திகள் அவ்வளவாக வெளியாகவில்லை. ஏன் தமிழ் வின் இணையம் மட்டும் இந்த நிதிசேகரிப்புக்கு பயன்படுத்தப்படவேண்டும்? ஒரு பொதுக் காரியம் என்றால் எல்லா இணையங்களிலும் போடலாமே.. ஏன் அவ்வாறு செய்யப்படவில்லை என்பது பூட்டப்பட்ட சந்திர முகியின் அறை ரகசியம்போல இருக்கிறது. ரஜனிதான் வரவேண்டும் கண்டுபிடிக்க ! ... அது ஒருபுறம் இருக்க...

பெருமதிப்புக்குரிய ஐயா நெடுமாறன் அவர்கள் 5.07.11 அன்று வெளியிட்ட அறிக்கையில் தாம் சுவிசில் நிதி திரட்ட பொறுப்பாக திரு.ரஞ்சன் அவர்களை நியமித்துள்ளதாக அறிவித்தல் எதுவும் விடவில்லை. ஆனால் சுவிசில் உள்ள சில நபர்களோ தாமாகவே இந்த நிதிதிரட்டலை ஆரம்பித்துவிட்டனர். அதனைத் தான் அதிர்வு இணையம் பிழை என்று எழுதியது. இதனையே பெருமதிப்புக்குரிய நெடுமாறன் ஐயாவும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தார். அதனை அதிர்வு இணையம் வெளியிட, சுவிசில் நிதி திரட்டிய நபர்கள் சண்டைக்காரன் காலில் விழுவதை விட சாட்சிக்காரன் கால்களில் விழலாம் என விழுந்துவிட்டனர்.

தமிழ் வின் கொடுத்த அழுத்தங்களும், சுவிஸில் பணம் திரட்டப்பட்ட நபர்களால் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக அவசர அவசரமாக மற்றுமோர் அறிவித்தல் தயாராகி, இன்று தமிழ்வின்னில் வெளியாகியுள்ளது. அதில் திரும்பவும் பெருமதிப்புக்குரிய ஐயா நெடுமாறன் அவர்கள் கையெழுத்திட்டுள்ளார். அதில் அவர் சுவிசில் நிதி திரட்ட தாம் ஒருவரை நியமித்துள்ளதாகக் கூறியுள்ளார். திரு ரஞ்சன் அவர்களின் நியமனம் இன்று தான் நடைபெற்றுள்ளது(ஐயா கையொப்பம் இட்டுள்ளார் மறக்கவேண்டாம்). அப்படி என்றால் முன்னர் நியமிக்கப்படவில்லை என்பது தான் அதன் கருத்து. எனவே முன்னர் நியமனம் பெறாமல் நிதி திரட்டியது குற்றம் தானே ? என்ன நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற வாதம் போல இருக்கிறது என்று பார்க்கிறீர்களா ?

சிவன் என்ன... யார் பிழைவிட்டாலும் பிழை பிழைதானே ! அதாவது நெடுமாறன் ஐயாவுக்கும், நிதிசேகரிப்பில் ஈடுபட்டவர்களுக்கும் இருவழித் தொடர்பாடல் இருந்திருந்தால் இதுபோன்ற அறிக்கை வெளியாகியிருக்காதே. திடீரென ஏற்படுத்தப்பட்ட தொடர்புகளால் அறிக்கை மாற்றப்பட்டு அவர்கள் நிரபராதிகள் ஆக்கப்பட்டு, அதற்கு துணைபோன தமிழ் வின்னின் கறைகள் அவசர அவசரமாகத் துடைக்கப்பட்டுள்ளது தமிழ் நாட்டு அரசியலைப் போல ! இந்த நிதி சேகரிப்பு குறித்து நாம் எழுதி இருக்காவிட்டால் சேர்க்கப்பட்ட நிதி சென்றடைந்திருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் நாம் எழுதியதால் தற்போது மக்கள் கொடுத்த பணம் ஒரு உண்ணத காரியத்துக்காகச் சென்றடையப்போகிறது ! கலகம் பிறக்காமல் வழி பிறக்காது என்பார்கள் ! அதுபோல அதிர்வு எழுதாமல் சில விடையங்கள் அம்பலத்துக்கு வராது!

எனவே அதிர்வு வெளியிட்ட செய்தியால் நாம் வெற்றிபெற்றிருக்கிறோம் ! மக்கள் ஆதரவு ஈகிகள் முற்றத்துக்கு பெருகியுள்ளது ! முடங்கியிருந்த நிதி சென்றடையப் போகிறது , மக்கள் இனியும் உதவிசெய்வார்கள் ! சரியான நிதிசேகரிப்பபர்கள் யார் என மக்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் ! எனவே எச் செய்திகளானாலும் நாம் வெளியிடப் பின்னிக்கப் போவது இல்லை என்பதனை நாம் வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.

நன்றி !

அதிர்வின் ஆசிரியபீடம்.

0 comments: