Tuesday, October 5, 2010

கே.பி. தயா மாஸ்ரர், கருணா சொகுசு வாழ்க்கை நாட்டின் போர்த்தளபதிக்கு சோறும் சம்பலும் - ஐ. தே. கட்சி குமுறல்

0 comments
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பவிருப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க பொன்சேகாவை விடுவிக்கும் போராட்டத்தை ஏனைய சகல கட்சிகளுடனும் இணைந்து முன்னெடுக்க கட்சி தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட கருணா, கே.பி.,தயாமாஸ்ரர் போன்றோர் சுதந்திரமாக சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாட்டைக் காப்பாற்றிய தளபதி சிறையில் சோறும் தேங்காய்ச் சம்பலும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே

பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் செய்தியாளர்கள் மத்தியில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டு 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பது தொடர்பில் நாட்டில் பல்வேறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தத் திருத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கமும் ஜனாதிபதியும் ஜனநாயக பாதையிலிருந்து விலகிச் செயற்பட்டுக் கொண்டிருப்பது தெளிவாகவே காணமுடிகின்றது.

நாட்டை பயங்கரவாதத்திடமிருந்து காப்பாற்றிய இராணுவத் தளபதி இன்று சிறையில் சோறும் தேங்காய்ச் சம்பலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். பௌத்த மகா சங்கத்தினரையும் அப்பாவி சிங்கள, முஸ்லிம், மக்களையும் கென்றுகுவித்த கருணா, கே.பி., தயாமாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்ரர் போன்றோர் சுதந்திரமாக விடப்பட்டிருப்பதோடு அவர்கள் சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை ஜனாதிபதி அங்கீகரிப்பார் என்று இந்த நாட்டில் வாழும் எந்தவொரு பிரஜையும் எதிர்பார்க்கவில்லை. இந்தளவுக்கு சர்வாதிகாரப் போக்கில் அவர் நடந்து கொள்வார் என்று எவருமே நம்பவில்லை. அனைவருமே ஜனாதிபதி தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார். மன்னிப்பார் என்றே எதிர்பார்த்தனர். ஜனாதிபதியின் இந்த முடிவை நாட்டின் 5/6 பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கின்றனர்.

போதாக்குறைக்கு இந்தத் தீர்ப்புக்கு எதிராகச் செயற்படுவோர் மீது அடக்கு முறையை பிரயோகிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. துண்டுப் பிரசுரம் விநியோகித்தால் கைது, சுவரொட்டிகள் ஒட்டினால் பொலிஸார் தாக்குதல் இதுதான் மகிந்த ஆட்சியின் ஜனநாயகம்.

ஆட்சியாளரின் இந்த சர்வாதிகார அடக்கு முறைகளைக் கண்டு நாம் ஒதுங்கப் போவதில்லை. மக்கள் பலத்தை அணிதிரட்டி நாடு பூராவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் மத வழிபாடுகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம். அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் ஒன்றுபட்டு போராட்டத்திலீடுபடுவதென ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

நாட்டிலுள்ள 20 பிரதான மத வழிபாட்டுத் தலங்களில் சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக பூஜை வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையும் நடத்தவிருக்கின்றோம். தொகுதிகள், கிராமங்கள் தோறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பவிருக்கின்றார். அதில் தேசத்தைக் காப்பாற்றிய தளபதியை குற்றவாளியாக்கி சிறையில் தள்ளியிருப்பதைக் கண்டித்து அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தவிருக்கின்றார் எனவும் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

0 comments: